மூலிகைகள்
தோல்நோய்களை நீக்கும் பூவரசு
![பூவரசு](https://www.siddhamaruthuvam.in/wp-content/uploads/2017/10/தோல்நோய்களை-நீக்கும்-பூவரசு-.jpg)
நீண்ட கம்பு கொண்ட இதய வடிவ தனியிலைகளையும் மஞ்சள் நிற மலர்களையும் உடைய உறுதியான என்றும் பசுமையான பெரிய மரம். இதன் இலை, பழுப்பு, காய், பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையது.
நூறாண்டு சென்றதொரு நுண்பூ வரசம்வேர்
தூரண்ட குஷ்டைத்தொ லைக்குங்காண்- வீறிப்
பழுத்த விலைவிதைப்பூ பட்டையிவை கண்டாற்
புழுத்தபுண்வி ரேசனமும் போம்.
நோய் தணித்து உடல் தேற்றவும் நாடி நடையை மிகுத்து உடல் வெப்பு அதிகரிக்கவும் தாதுக்களின் எரிச்சலைத் தணித்து அவற்றைத் துவளச் செய்யவும் பயன்படும்.
மருத்துவ பயன்கள்
- பழுப்பை உலர்த்திக் கருக்கித் தேங்காய் எண்ணெயில் கலந்து போட சொறி சிரங்கு, கரப்பான், ஊரல், அரிப்பு குணமாகும்.
- இலைகளை அரைத்து வதக்கிக் கட்ட வீக்கம் குறையும்.
- பூவரசு காயின் சாற்றைத் தடவிவரப் படர் தாமரை குணமடையும்.
- 100 ஆண்டுகள் சென்ற மரத்தின் காய், பூ, பட்டை ஆகியவற்றைச் சமனளவு பொடித்துக் காலை, மாலை 1 தேக்கரண்டி நீண்ட நாள் சாப்பிட்டு வரத் தோல் வியாதிகள் அனைத்தும் தீரும்.
- 200 கிராம் பட்டையை 1 லிட்டர் நீரில் போட்டுக் கால் லிட்டராகக் காய்ச்சி தினம் 2 வேளை குடித்து வரக் காணாக்கடி விஷம், மகோதரம், பாண்டு, வயிறு வீக்கம் குணமாகும்.